நான் எங்கே உன்னில்!
நான் என் உயிரை விட்டு உனக்கு நிரூபிக்க
வேண்டியது என் அன்பை என்றால் இதோ அதற்கும் நான் தயார்! அவன் தொப்பென்று
மாடியிலிருந்து கீழே குதித்தான். அவன் உடல் டமால் என்று உடைந்து சிதறியது.தலை
முறுக்கி கை கால்கள் பரப்பி அவன் விழுந்து கிடந்த தோற்றம் அருவெறுப்பையும் ,
கழிவிரக்கத்தையும், என்ன
மடையன் இவன்
இப்படிச் சாக
என்ற கோபத்தையும் ஏற்படுத்தியது.
முட்டாள்களின் உலகத்தில் ' உயிரின் விலை காதலில் வெற்றி ' என்பதாக எழுதப்பட்டுள்ளதா!
உயிரை கொடுத்தேனும் காதலை நிரூபிக்க பிரயாசைப்படும் கூட்டம் எவர் விரித்த வலையில்
காலம் காலமாய் சிக்கிக்கொண்டு தவிக்கிறது.அந்த சிங்க வலையிலிருந்து யுவன்களையும் ,
யுவதிகளையும் காப்பாற்ற ஒரு சுண்டெலியின் உதவியை கூட பெற முடியாதகூட்டமாக மனித
இனம் எப்படி மாறியது? ஏன் மாறியது? " அன்பே கடவுள்
" என்றவர்கள் கடவுள் மட்டும் தான்
அன்பாய் இருக்க முடியும் என்றார்களா? இல்லை அன்பு என்பது கடவுளுக்கு மட்டும் ஆன
ஒன்று என்றார்களா! " The heart of him
who truely loves is a paradise on earth;
he
has God in himself, for God is love" Lamennais " லேமெனைஸ் சொன்னது போல
உண்மையான அன்பு நிறைந்த நெஞ்சம் பூமியில் சொர்கம் அல்லவா? " அன்புடையர் எல்லாம் உடையர் ...."
எல்லாம் தன் அகத்தே கொண்ட மனிதன் அன்பின் பால் தஞ்சம் கொள்ளும் பொழுது மட்டும்
குருடணாவது ஏன்? இல்லையென்றால் மனிதனிடம் சிக்கிக்கொண்ட அன்பு
மட்டும் நிரூபி நிரூபி என்று கதறுவதும் இதோ இதோ என்று ஆண்களும் பெண்களும்
மாறி மாறி ஓடி ஓடி மாண்டுப்போவதும் எதனால்?. இந்த ஓட்டம்,
ஆதாம் ஏவாளில் தொடங்கியது இன்றும் தொடர்கிறதா?. விலக்கப்பட்டது
"அறிவுக்கனி" என்று தெரிந்தும் அதுதான் வேண்டும் என்று அடம் பிடித்த
முதல் பெண்ணில் ஆரம்பித்த நிரூபண மோகம் எவர் விட்ட சாபம். பைசாசங்கள்
கை கொட்டி எக்களிக்கும் பூமியில் பிணங்கள்தான் அன்பின் நிரூபனமா! அன்பின்
நிரூபணம் அன்பு மட்டும் அல்லவா? கடவுள் இல்லை என்று
சொல்ல முடியாதவர்கள் அன்புதான் கடவுள் என்று சொல்லி வைத்தார்களா? "
இல்லை அன்பு
என்பது கடவுளைப்போல காணக்கிடைக்காத ஒன்று என்றார்களா? "காதலாகி கசிந்து
கண்ணீர் மல்கி " என்று இம்மைக்கும் மறுமைக்கும் அன்பைத் தேடியவர்கள் அடைந்தது
கூடமரனத்தைத்தானா? "
அன்பு எனும் ஆறு கரை அது புரள நன்புலன் ஒன்றி...."
" நாத நாத என்று அழுது அரற்றி ..." " வீழ்ந்து புரண்டலறி...." " நாண் மலர் பிணையலில்
தாள்தனை இடுமின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின்...." என இறைவனின்
அடி பற்றி" தொழுது உளம் உருகி உடல் கம்பித்து ஆடியும் அலறியும் பாடியும்
பரவியும் அகம் குழைந்து மெய்விதிர்த்து ........." . உன்னைப்போற்றி என்றும்
கைதாள் நெகிழவிடேன் " இறைவா அதனால் " என்னை கண்டுகொள்ளேன்" ( மாணிக்க வாசகர்)
என் இறைஞ்சி கதறி அவர்கள் உயிர் கண்களில் கரைந்து கண்ணீராக பெருக்கெடுத்து ஓடியது
போல இன்று இளைஞர்களின் உயிர் ஒரு முழ கயிற்றில், ஒரு அவுன்சஸ் விஷத்தில், ஒரு
டின் கெரசினில், ஒரு பாக்கெட் சாணி மருந்தில்..........இத்தியாதிகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
." உன்னில் நான் என்னில் நீ
" என்பதும் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உன்னில்
என்னை என்னில் உன்னை " என்பதும் பின் " நான் எங்கே உன்னில் காட்டு காட்டு "என்ற
நச்சரித்தலும், கண் கசக்கலும் , கால நேரமற்ற ஓயாத ஒப்பாரியும்! சீ! இப்படி என்ன அன்பு
வேண்டியிருக்கிறது! அன்பை வெறுத்தவர்கள் அடையும் சொர்கம்தான் மரணமா! " love is divine"
"will ever
divinithy be seen? "..... "கண்டவர் விண்டிலர் " அன்பைக் கண்டவர்.... காணுதலை
பேரின்பக்காட்ச்சியாய் உணர்ந்தவர் என்று வைத்துக்கொண்டால் அவரும் தன் சுண்டெலி
பல் கொண்டு சிங்கத்தை வலையிலிருந்து மீட்க முடியாது என்று கை தூக்கி அம்பேல்
என்று ஆட்டத்தை விட்டு ஓடும் வீரனாக பல்டி அடித்து " விண்டவர் கண்டிலர் " என்று
கூறிவிட்டார். ஓ !அதன் பின் "அன்பே மாயை " என்பது வந்துவிட்டது. அன்பே கடவுள் என்பதை
அன்பே பொய் என்று மாற்றிய அனுபவம் எவர் கண்டது? பொய்யை மெய் என்றும் மெய்யை
பொய் என்றும் காட்டும் மாயக்கண்ணாடியினை மனிதனின் கண்ணில் மாட்டிய கண் மருத்துவர்
யார்? அவரிடமாவது கூரிய பற்கள் உண்டா? அவராவது அன்பை நிரூபிக்கத் தேவை
அன்பை பிரதிபளித்துக் காட்டும் ஆத்மக் கண்ணாடி மட்டுமே அப்பழுக்கற்ற,
பளிங்கு போன்ற ஆங்கிலத்தில் clean slate என்று சொல்வோமே அந்தக் கண்ணாடி.
அது மனிதனின் அறிவற்ற மூளையிலும் ,அவனின் குரங்கு மனதிலுமில்லை என்றும்
புரியும்படி சொல்லுவாரா? " அன்பு என்பது எப்பொழுதும் தொலைவதில்லை.அன்பு மறுத்தளிக்கப்பட்டால்
அது திரும்பிப் பாய்ந்து நம் இதயத்தை மென்மையும், தூய்மையும் படுத்தும்" என்ற வாஷிங்டன் இர்விங்கின்
நம்பிக்கை வாக்கியங்களில் தஞ்சம் புகுமா மனித இனம்? வாழ்க்கை தொடர்பான மனிதனின் எல்லா முயற்சியும்
தூய்மையான , மென்மையான இதயம் பெறவே எனில் அன்பு அதை சாத்தியமாக்கும் பட்சத்தில்
அதை வெறுப்பதும், உமிழ்வதும்...... ஏன்? உன்னில் ஆழ்ந்து உன்னைப்பார் நீயே அன்பாய்! நீயே காதலாய்!
நீயே யாதுமாய் தெரிவாய் மனிதா. உன்னில் அமிழ்ந்து உன்னை நீ கண்டுகொள்ளும் வரை மீட்சி
உனக்கு இல்லை. நீ கர்ஜிக்க கற்றுக்கொண்ட சிங்கமனிதன். நீ மாட்டிக்கொண்ட
அன்பு வலையிலிருந்து வெளியேற எப்பொழுதோ தப்பிக்க விட்ட சுண்டெலிக்காக
காத்திருக்காதே. வலையும் நீ! எலியும் நீ ! இதை நீ உணராதவரை " நான் என் உயிரை விட்டு
உனக்கு நிரூபிக்க வேண்டியது என்அன்பை என்றால் இதோ அதற்கும் நான் தயார்....."
நொடிக்கு ஒரு தொப்பென்றசத்தம் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்..........
நாமும் தடையில்லாமல் இம்மாதிரியான செய்திகளை நாளேடுகளில் படிக்க வேண்டியதுதான்.....
No comments:
Post a Comment